மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கோயம்புத்தூர் மாநகராட்சியின், கீழ் மேம்படுத்தப்பட்ட குளங்களை பராமரித்தல் மற்றும் இயக்குதல் ஆகிய பணிகள் துவக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதி குளம். குமாரசாமி குளம். செல்வசிந்தாமணி குளம், பெரியகுளம். வாலாங்குளம் மற்றும் குறிச்சிகுளம் ஆகிய ஏழு குளங்கள் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நடைபாதை பூங்காங்கள், படகு நிலையம், உணவகங்கள், சிறுவர் விளையாட்டு திடல், கலை நிகழ்ச்சிகள் மையம் ஆகியவை அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவற்றுள் தமிழ் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதத்தில் திருவள்ளுவர் சிலை, ஜல்லிக்கட்டு, பரதநாட்டியம், கலை சிற்பங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு குளத்தின் கரையிலும் 2.5 கி.மீட்டர் முதல் 5 கி.மீட்டர் வரை நடைபாதை அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குளங்களை சிறந்த முறையில் பராமரித்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் மேற்கொள்ளும் வகையில், குளங்களை பராமரிப்பு மற்றும் இயக்குதல் ( O& M) பணிக்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு புதுடெல்லியைச் சேர்ந்த தி.ள்.லயன் சர்வீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு பணி உத்தரவு வழங்கப்பட்டு, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மேற்படி நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் இன்று முதல் (14.03.2024) பணியை துவங்கியுள்ளது. இந்நிறுவனம் நாடுமுழுவதும் பல மாநகராட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகிறது. பூங்கா பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சிவில், எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணி ஆகிய அனைத்துப் பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

இந்நிகழ்வில் செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, ஸ்மார்ட் சிட்டி பொது மேலாளர் திரு.பாஸ்கரன், உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், தி/ள் லயன் சர்வீஸ் லிமிடெட் நிறுவன அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.